வாய்க்கால் தரவைப்பிள்ளையார் கோயிலுக்கு வட கிழக்காக ஈசான திசையிலே கிராமத்துக்கு காவல் தெய்வம் போன்று அமைந்ததே முதலி கோயில் என அழைக்கப்பட்டு வந்த சப்த கன்னிகள் கோயில் ஆகும். இக்கிராமத்தில் ஒரே
இடத்தில் ஏழுபெண் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பெருமைமிக்க ஆலயமாக இது விளங்குகின்றது. நீர்வேலிச்சந்திக்கு வடகிழக்காக அமைந்ததே பன்
னாலை என்னும் பகுதி. இப்பகுதியின் கிழக்குப்பக்கம் வயலும் நீர்நிலைகளும் உண்டு.
பண்ணாலை என்பதே பன்னாலை என வழங்கிற்றெனலாம். பண்ணை என்பது மருதநிலம், நீர்நிலை, தோட்டம் முதலியவற்றைச் சுட்டுஞ் சொல் எனவே (பண்ணை +ஆல்+ஐ) பண்ணாலை என்பது வயல் அல்லது தோட்டத்துக்குப் பக்கமாயமைந்த மக்கள் குடியிருப்பிடத்தைச் சுட்டும் பெயராகும் பண்ணாலை பன்னாலை ஆயிற்று. இப்பெயருக்கு அமைவாக அமைந்த இப்பகுதியில் ‚திருஸ்ரீச்சரம்‛ என
வழங்கும் பகுதியில் அடர்ந்த ஆலமரநிழலில் ‚அபிராமி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி என ஏழு வடிவங்களில் அம்பிகை எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். இது கிராமத்துக்கு
பெருமை தரும் அமைப்பாகும். இற்றைக்கு முந்நூறு ஆண்டுகட்கு முன்னர் முதலியார்
என்னும் பெயர் கொண்ட பெரியார் ஒருவர் ஆலங்கன்றின் கீழ் அம்பிகையை சிறுவடிவங்கொண்டமைத்து வழிபட்டு வந்தார். இதனாலேயே இவ்வாலயம் ‚முதலிகோவில்‛ என அழைக்கப்படலாயிற்று. இன்றுவளர்ந்து பெருவிருட்சமாக நிற்கும் இந்த ஆலமரத்தில் குழைவெட்டவோ, மரத்தில் ஏறியோ, அல்லது
கீழ்நின்று சிறுவர்கள் விளையாடவோ அம்பிகைகள் அனுமதிக்காத பல சம்பவங்கள் உண்டு. இச்சப்தகன்னிகளுக்கு 1992ஆம் ஆண்டு ஆலயப்
புனருத்தாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அழகிய கட்டிட
அமைப்புகளுடன் கூடிய இவ்வாலயம் வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் 2-6-1992இல் மகாகும்பாபிஷேகமும் செய்யப்பட்டதோடு| வைகாசி மாத விசாக நட்சத்திரத்தை கடைசி நாளாக வைத்துப் பன்னிரண்டு தினங்கள் வருடாந்த
அலங்கார உற்சவம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் நவராத்திரி, திருவெம்பாவை போன்ற காலங்களில் விசேட பூசை ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. தைப்பொங்கலுக்கு விசேட பொங்கலும் நடைபெறுகின்றது.
இவ்வாலயத்துக்குப் புதிதான அன்னதான மண்டபம் அமைக்கப்பட்டு உற்சவகாலங்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது சிறப்பானதாகும்.
இப்படியான அமைவு கிராமத்தின் சிறப்பிற்கு இன்றியமையாதன என ஆகமங்களின் கூற்றுப்படி அறியக்கூடியதாகவுள்ளது. இவ்வாலயத்தின் ஈசான திசையில் மேலும் காவல்தெய்வங்களாக பழைய அண்ணமார், புதிய அண்ணமார் என இரு அண்ணமார் கோயில்களும், அம்மன் கோயிலும் வீரபத்திரர் கோயிலும் அமைந்துள்ளன. இவற்றில் அண்ணமார் கோயில்களிலும் வீரபத்திரர் கோயிலிலும் மிருகபலியீடும் வேள்வியென அழைக்கப்படும் நிகழ்வும் நடைபெறுவதோடு ஆண்டுக்கொரு தடவை பெரும் பொங்கல் நடைபெற்று வருகின்றது. அம்மன் கோயிலிலும் பெரும் பொங்கல் நடை
பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நாமும் சப்த கன்னிகளின் அருளை வேண்டுவோமாக.